மக்ரோன் தலைமையிலான வலதுசாரி பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்க முடியும் என்பதை மெலோன்சோன் சமிக்ஞை செய்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் பிரெஞ்சு பாராளுமன்றக் கட்சிகளின் குழுத் தலைவர்களுடனான அவரது சந்திப்புகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஜோன்-லூக் மெலோன்சோன் தலைமையிலான புதிய மக்கள் முன்னணி (NFP) கூட்டணி, மக்ரோன் ஓர் அரசாங்கம் அமைக்க அனுமதிக்குமாறு அவரிடம் முறையீடு செய்வதை முடுக்கி விட்டுள்ளது. இதுவரையில், மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சியும் (LFI) ஜூலை 7 தேர்தல்களில் வெற்றி பெற்ற புதிய மக்கள் முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளும் ஒரு பாராளுமன்ற பெரும்பான்மையை உருவாக்க முயற்சிப்பதை மக்ரோன் அனுமதிக்க மறுத்துள்ளார்.

தேர்தல்கள் முடிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களாக, மெலோன்சோனும் புதிய மக்கள் முன்னணியை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் தேர்தல் முடிவுகளை மக்ரோன் நசுக்குவதற்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கொள்கையின் பிற்போக்குத்தனமான தாக்கங்கள் விரைவாக வெளிப்பட்டு வருகின்றன. இவ்வார இறுதியில் மெலோன்சோனின் அறிக்கைகளுக்குப் பின்னர், அவரும், அடிபணியா பிரான்ஸ் கட்சியும் மக்ரோனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு வலதுசாரி NFP அரசாங்கத்தின் நாடாளுமன்ற ஆதரவாளர்களாக சேவையாற்ற தயாரிப்பு செய்து வருகின்றனர் என்பது தெளிவாகிறது.

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் (LFI) மந்திரிகளை உள்ளடக்கியிருக்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்ரோன் மறுத்து வருவதை எதிர்கொண்டுள்ள நிலையில், LFI பங்கேற்காத NFP தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதில் LFI மகிழ்ச்சியாக இருக்கும் என்று மெலன்சோன் சனிக்கிழமை பிற்பகல் TF1 தொலைக்காட்சியின் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அடிபணியா பிரான்ஸ் கட்சியின் எந்தவொரு அமைச்சர்களும் இல்லாத, 37 வயதான நிதியமைச்சரான லூசி காஸ்டெட்ஸ் தலைமையிலான ஒரு புதிய மக்கள் முன்னணி அரசாங்கத்தை, கட்சி ஆதரிக்குமா என்று வினவிய போது, மெலன்சோன் பின்வருமாறு பதிலளித்தார்:

“நாங்கள் ஒருபோதும் பிரச்சினையின் பக்கத்தில் இருக்க மாட்டோம், நாங்கள் எப்போதும் தீர்வின் பக்கத்தில் இருப்போம். ஆகவே உங்கள் கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பதிலளிக்க, மூன்று மக்ரோன்-ஆதரவு கட்சிகள் மற்றும் வலதுசாரிகளுக்கு நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். லூசி காஸ்டெட்ஸ் அரசாங்கத்தில் அடிபணியா பிரான்ஸ் கட்சியின் அமைச்சர்கள் இல்லை என்றால், அதைக் கண்டித்து வாக்களிக்க மாட்டோம் என்றும், நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் எந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் புதிய மக்கள் முன்னணியில் வந்தோமோ அந்த வேலைத்திட்டத்தை அது செயல்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றும் நீங்கள் சூளுரைக்கிறீர்களா?”

தொழிலாளர்களுக்கு உண்மை சொல்லப்பட வேண்டும். அடிபணியா பிரான்ஸ் கட்சியின் அமைச்சர்கள் இல்லாத ஒரு புதிய மக்கள் முன்னணி அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் பெருவணிக சோசலிஸ்ட் கட்சி (PS) தலைமையிலான ஒரு அரசாங்கமாக இருக்கும். சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த வரலாறு கொண்ட ஒரு சில ஸ்ராலினிச மற்றும் பசுமைக் கட்சி அமைச்சர்கள் அதில் அங்கம் வகிப்பர். ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் ஐரோப்பாவின் பிற சமூக-ஜனநாயகக் கட்சிகளால் திணிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் பொலிஸ்-அரசு பிற்போக்கு கொள்கைகளுடன் நீண்ட மற்றும் கசப்பான அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.

NFP இன் வேலைத்திட்டத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட ஒரு சில அடையாள சமூக வேலைத்திட்டங்களை, அதுபோன்றவொரு அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்ற மெலோன்சோனின் வாதம் ஒரு அரசியல் மோசடியாகும். மாலியில் அதன் போர் வேலைத்திட்டம், ஓய்வூதிய வெட்டுக்கள், அதன் கடுமையான தொழிலாளர் சீர்திருத்தங்கள், அதன் இரண்டாண்டு கால அவசரகால நிலை ஆகியவற்றுடன், ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் 2012 முதல் 2017 வரை இன்று மக்ரோனின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. உண்மையில் மக்ரோன், பிரான்சுவா ஹாலண்டின் அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராக சேவையாற்றினார்.

மிலோன்சோன் வலதுசாரி, PS தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விரைகிறார். ஏனெனில், ஜூலை 7 தேர்தல் முடிவை மக்ரோன் வெளிப்படையாகவே மிதித்துத் தள்ளுவது, தொழிலாளர்களை தீவிரமாக்கி, அவர் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இடத்துக்கு வெகு தொலைவில் ஒரு இயக்கத்தைத் தூண்டிவிடக்கூடும் என்று மெலோன்சோன் பீதியடைந்துள்ளார்.

“டைட்டானிக் கப்பல் கேப்டனுக்கு கடைசி எச்சரிக்கை” என்று தலைப்பிட்ட மெலோன்சோனின் வலைப்பதிவின் சமீபத்திய குறிப்பின் உள்ளடக்கம் இதுதான். 2022 ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும், 2024 பாராளுமன்றத் தேர்தல்களில் புதிய மக்கள் முன்னணிக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் போராட்டத்துக்கு அழைக்க அடிபணியா பிரான்ஸ் கட்சி தயாராக இல்லை. மாறாக, NFP மீதான மக்ரோனின் தாக்குதல்கள் தொழிலாள வர்க்கத்தில் உள்ள பிரெஞ்சு முதலாளித்துவ அரசின் ஸ்தாபனங்களை மதிப்பிழக்கச் செய்வதற்கு முன்னதாக போக்கை மாற்றிக் கொள்ளுமாறு அது அவரிடம் மன்றாடுகிறது.

அரசியல் ஸ்தாபனமும் மக்களும் “பல்வேறு தலைமுறையினரால் ஆனவர்கள்... ஒவ்வொருவரும் அரசியல் நெருக்கடிகள் மற்றும் குறிப்பாக அதிகார நெருக்கடிகளில் அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவர்கள்” என்று எச்சரித்த மெலோன்சோன் தனது எதிரிகளை “அவர்கள் அனுப்பும் செய்தியைப் பற்றி கவனமாக சிந்திக்கும்படி கேட்டுக் கொண்டார். நாடு. தேர்தல் முடிவை மதிக்க மறுப்பது, பிரான்சில் உள்ள தொழிலாளர்களை ஆழமான தாக்கங்களுடன் அரசியல் முடிவுகளை எடுக்கத் தள்ளும் என்று அவர் எச்சரித்தார்:

அவர்கள் நாட்டுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள்? ஒரு சர்வாதிகாரியை எதிர்க்க சட்ட வழி இல்லையா? ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்ப்பதற்கு நிறுவனங்களுக்குள் எந்த வழியும் இல்லை என்பதுதானே? உலகில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலும் புரிந்து கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதைப் போல, பாராளுமன்ற ஜனநாயகம் பிரான்சில் இனியும் செல்லுபடியாகாது? அல்லது வாக்களிப்பதால் பயனில்லை என்று? … இவ்வாறு அவர்கள் என்ன பாதையை வகுக்கிறார்கள், என்ன வன்முறைச் செயல்களை இவ்வாறு தூண்டுகிறார்கள்?

மக்ரோன் பெருவாரியான மக்களின் எதிர்ப்புக்கு முன்னால் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு திட்டநிரலைப் பின்தொடர்கின்ற நிலையில், அவர் மக்களுக்கு எதிராக ஆட்சி செய்கிறார் என்ற முடிவுக்கு பிரெஞ்சு தொழிலாளர்கள் வந்துள்ளனர். ரஷ்யாவுடனான ஒரு போருக்காக உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு மக்ரோன் விடுத்த அழைப்பு, மற்றும் தொழிலாளர்களை விலையாக கொடுத்து போருக்கு நிதியாதாரம் திரட்ட கடந்த ஆண்டு அவர் செய்த ஓய்வூதிய வெட்டுகள் இரண்டையும் பிரெஞ்சு மக்களில் 90 சதவீதத்தினர் நிராகரித்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. நேட்டோ சக்திகளின் ஆதரவுடன் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு ஆழ்ந்த எதிர்ப்பும் உள்ளது.

ஆனால், மெலோன்சோன் புரட்சிகர முடிவுகளை எடுப்பதற்கு தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக பேசவில்லை. மாறாக, மக்ரோன் தொடர்ச்சியாக மற்றும் இப்போது வெளிப்படையாக மக்கள் கருத்தை நசுக்கி வருகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கோபத்தை NFP யால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்று எச்சரிப்பதற்காகவே அவர் பேசுகிறார்.

தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், சோசலிஸ்ட் கட்சியும் மக்ரோன் அரசாங்கத்தின் பிரிவுகள் கூட ஒரேயடியாக இடது நோக்கி நகர்ந்து மக்ரோனுக்கு எதிர்ப்பைக் கட்டியெழுப்பத் தொடங்கும் என்ற கற்பனையை மட்டுமே மெலோன்சோன் முன்னிறுத்தி வருகிறார். இந்த வார இறுதியில், TF1 தொலைக்காட்சியில் அவர் விவாதித்த துல்லியமான அரசாங்க வகை குறித்து பிரமைகளை வளர்க்க மெலோன்சோன் முனைந்தார். பாராளுமன்றத்தில் பரந்த பெரும்பான்மையுடன் எதிர்ப்பை எதிர்கொள்ளும் மக்ரோனை பதவி நீக்கம் செய்வதற்கான LFI இன் அழைப்புகளை ஆதரிக்க PS நகர்கிறது என்று அவர் எழுதினார்:

அடிபணியா பிரான்ஸ் இயக்கம் விடுத்த எச்சரிக்கைகள் ஏற்கனவே ஒரு விளைவைக் கொண்டிருந்தன: அவை சோசலிஸ்ட் கட்சியை தீவிரமயப்படுத்தின, அது இப்போது பதவிநீக்க குற்றவிசாரணைக்கு அழைப்புவிடுப்பதை விட சிறந்தது என்று நம்பும் ஒரு கண்டனத் தீர்மானத்தை ஆதரிக்கிறது. இது ஒரு நல்ல முடிவு. எனவே கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. ஜனாதிபதியின் சூழ்ச்சிகளுக்கு எதிர்காலம் குறைவு என்று நாம் ஏற்கனவே கூறலாம். டைட்டானிக் கப்பலில் பயணத்தை முடிக்க முடிவு செய்தவர்கள் நிச்சயமாக அதிகாரம் பற்றிய தங்கள் கனவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆனால், சோசலிஸ்ட் கட்சியும் மக்ரோனுடன் அதன் உறவுகளைப் பலப்படுத்த செயல்பட்டு வரும் சக்திகளும், புதிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேலைத்திட்டத்தில் அடிபணியா பிரான்ஸ் வழங்கிய பெயரளவிலான சமூக வாக்குறுதிகளை ஏற்பதை நோக்கி நகரவில்லை. உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கும் பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் இராணுவ போலிஸ் முகமைகளைப் பலப்படுத்தி, அவற்றை நடைமுறைப்படுத்தவும் அவை நகர்ந்து வருகின்றன. இது, மறைந்த 1968 முன்னாள் மாணவர் போராட்டக்காரர் ஆண்ட்ரே குளுக்ஸ்மான் இன் மகனும், ஜூன் 2024 ஐரோப்பியத் தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் தேர்தல் பட்டியலில் தலைமை வகித்தவரும், பொது சதுக்க கட்சியின் தலைவருமான ரஃபேம் குளுக்ஸ்மனின் கருத்துக்களில் வெளிப்பட்டது.

காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலிய இனப்படுகொலையை பகிரங்கமாக மறுத்ததற்காக இழிபுகழ் பெற்ற குளுக்ஸ்மன், கடந்த வாரம் மக்ரோன்-ஆதரவு இதழான லே பாயிண்ட் க்கு கூறுகையில், அடிபணியா பிரான்ஸ் முன்மொழிந்த தொழிலாளர்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட சமூக விட்டுக்கொடுப்புகளுக்கும் கூட அவர் ஒரு தீர்மானகரமான எதிர்ப்பாளராக இருப்பதாக தெரிவித்தார்.

“அடிபணியா பிரான்ஸ் உடன் நாம் கொண்டுள்ள மிக ஆழமான கருத்து வேறுபாடுகளை மாயாஜாலமாக கடந்து வருவதில் நான் ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை,” என்று குளுக்ஸ்மன் தெரிவித்தார். புதிய மக்கள் முன்னணியில் மெலோன்சோன் உடன் தங்களின் கூட்டணியைப் பேணும் சோசலிஸ்ட் கட்சியில் உள்ளவர்களின் “பலவீனத்தை” கண்டனம் செய்த அவர், “சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு நம்பகமான திட்டத்துடன், நாடெங்கிலும் விதைக்கப்பட்ட, மற்றும் அடுத்த தேர்தல்களில் அதிவலதை தோற்கடிக்கக் கூடிய, ஒரு புத்திஜீவிதரீதியில் மேலாதிக்கம் செலுத்தும் சமூக ஜனநாயக சக்தியைக் கட்டியெழுப்புவதே எனது பொறுப்பாகும்,” என்றார்.

முதலாளித்துவ வர்க்கம் யுத்தத்திற்குள்ளும் மற்றும் தாக்குப்பிடிக்க முடியாத சமூக சமத்துவமின்மை மட்டங்களுக்குள்ளும் மூழ்கி வருகின்ற நிலையில், தொழிலாளர்களும் இளைஞர்களும் ஜனநாயக ஆட்சி வடிவங்களின் வீழ்ச்சியை எதிர்கொள்கின்றனர். ஜனவரி 6, 2021 அன்று அமெரிக்க காங்கிரஸ் கட்டிடமான கேபிடோலுக்கு எதிரான பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு இட்டுச் சென்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியை டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்த நிலையில், பிரான்சிலும் இது நிகழ்கிறது என்ற உண்மையானது, இந்த நெருக்கடியின் சர்வதேச தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்கள் மிக நீண்டகால முடிவுகளை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் ஆளும் வர்க்கத்தின் கரங்களில் இருந்து அதிகாரத்தை எடுத்து சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை நடத்தாவிட்டால், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்பது உயிரற்ற காகிதமாகவே இருக்கும்.

அதுபோன்றவொரு போராட்டத்திற்கான அத்தியாவசியமான முன்நிபந்தனை என்னவென்றால், அது ஒரு சர்வதேசத் தன்மையைக் கொண்டுள்ளது மற்றும் அதை தேசிய அரசின் இப்போதிருக்கும் அரசியல் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள் மூலம் தொடுக்க முடியாது. இதற்கு ஸ்ராலினிச மற்றும் சமூக-ஜனநாயக தொழிற்சங்க அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக, நிரந்தரப் புரட்சி என்ற ட்ரொட்ஸ்கிச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஒழுங்கமைப்பது அவசியமாகும். பிரான்சில் இதற்காக போராடி வரும் சக்தி புதிய மக்கள் முன்னணியோ அல்லது அதன் பல்வேறு போலி-இடது அரசியல் துணைக் கட்சிகளோ அல்ல, மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும்.

Loading