இம்ரான் கான் மற்றும் அவரது இஸ்லாமிய ஜனரஞ்சக PTI  ஆதரவாளர்களுக்கு எதிராக அதிகாரிகள் பழிவாங்கலை கட்டவிழ்த்துள்ளனர், பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சிக்கு தள்ளப்படுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாகிஸ்தானில் நீண்ட காலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி தற்போது கொதித்து வருகிறது. உடனடி புதிய தேர்தல்களுக்கான முன்னாள் பிரதம மந்திரி இம்ரான் கானின் பிரச்சாரம், மிருகத்தனமான சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கை, எண்ணெய் விலை உயர்வு மற்றும் பாரிய வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் மீது தொழிலாள வர்க்கத்தின் கோபத்தின் வெடிப்பைத் தூண்டிவிடக்கூடும் என்ற அச்சத்தில், அரசாங்கமும் இராணுவமும் சர்வாதிகார அரசாங்க வடிவங்களை எடுத்துள்ளன.

கடந்த வாரம் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், இராணுவத்தினர் இம்ரான் கானை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்ததானது, அவரது இஸ்லாமிய ஜனரஞ்சகமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) அல்லது நீதிக்கான இயக்கத்தின் ஆதரவாளர்களின் மத்தியில் பாரிய எதிர்ப்புக்களை தூண்டியதன் காரணமாக, அரசு மற்றும் இராணுவ நிலைகள் பரவலான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டன.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மே 18, 2023 வியாழன், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகிறார். [AP Photo/ K.M. Chaudary]

இதற்கு அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் பதில் மிருகத்தனமான அடக்குமுறையாகும். இணையம் மற்றும் சமூக ஊடக சேவைகள் நான்கு நாட்களுக்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டு மில்லியன் கணக்கான மக்களின் தகவல் அறியும் உரிமையைப் அரசாங்கம் பறித்துள்ளது. நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலும் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, குறைந்தது ஒன்பது பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படையினருக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே நான்கு நாட்களாக மோதல்கள் தொடர்ந்தன. பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட்டு PTI தலைவரின் கைது சட்டவிரோதமானது என்று அறிவித்ததையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கலவரங்கள் முடிவுக்கு வந்தது. மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மே 17 வரை இம்ரான் கான் அசல் குற்றச்சாட்டாகவோ அல்லது மற்றவர்களின் மீதோ மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுக்கின்றன.

இருந்தபோதிலும், ஒரு வாரத்தில், நிலைமை மிகவும் நிலையற்றதாகவே உள்ளது, பாகிஸ்தானின் அரசியல் உயரடுக்கு மற்றும் முதலாளித்துவ அரசு நிறுவனங்களுக்குள் பிளவுகள் மேலும் ஆழமடைந்து வருகின்றன. 

PTI இன் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எதிராக இராணுவமும் அரசாங்கமும் பழிவாங்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. 7,000 PTI தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டதாக இம்ரான் கான் கூறினார். ஊடகங்கள் குறைவான புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டுகின்ற போதிலும், மொத்த எண்ணிக்கை ஆயிரங்களில் உள்ளது என்பதை அவை ஒப்புக்கொள்கின்றன.

இராணுவத் தளபதி (COAS), ஜெனரல் அசிம் முனீர் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் படைத் தளபதிகளின் சிறப்பு மாநாட்டைத் தொடர்ந்து, இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எதிர்ப்பாளர்கள் இராணுவ நீதிமன்றங்களால் விசாரிக்கப்படுவார்கள் என்று திங்களன்று அது அறிவித்தது. இராணுவத்தால் தலைமை தாங்கப்படும் இந்த நீதிமன்றங்கள் பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் மூடப்பட்டுள்ளன, மேலும் அவற்றின் தீர்ப்புகளை பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் கூட மேல்முறையீடு செய்ய முடியாது. 

படைத் தளபதிகளின் கூட்டத்திற்குப் பிறகு இராணுவத்தின் செய்தி அலுவலகம், மக்கள் சேவை தொடர்பு அலுவலகம் (ISPR) ஒரு அறிக்கையை வெளியிட்டது. ‘‘இராணுவத்தின் நிலைகள், உடைமைகள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுக்கு எதிரான இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தான் ராணுவச் சட்டம் மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் உள்ளிட்ட பாகிஸ்தானின் தொடர்புடைய சட்டங்களின் கீழ் விசாரணையின் மூலம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று மன்றம் தீர்மானித்துள்ளது‘‘ என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கையும் ISPR அறிக்கையும் எதிர்ப்பாளர்களின் தாக்குதல்களால் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் (நீண்ட காலமாக நாட்டின் சக்திவாய்ந்த அரசியலில் முக்கியமானவர்களாக இருந்து, கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டவர்கள்) எந்த அளவிற்கு திகிலடைந்துள்ளனர் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ISPR அறிக்கையானது,  கடந்த வார நிகழ்வுகளில் பாகிஸ்தானின் மூலோபாய எதிரியான இந்தியா ஒரு பங்கைக் கொண்டிருந்ததாகவும், அவை ஆயுதப்படைகளின் ஒற்றுமையை அச்சுறுத்துவதாகவும் கூறியது. “திங்கட்கிழமை கூட்டத்தில் தளபதிகள், ISPR, இராணுவத்தின் தலைமைக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட, வெளிப்புற அனுசரணை மற்றும் உள்நாட்டில் எளிதாக்கப்பட்ட பிரச்சாரப் போர் குறித்து கவலை தெரிவித்தனர். இந்த முயற்சிகள் ஆயுதப் படைகளுக்கும் பாகிஸ்தானின் மக்களுக்கும், அதே போல் ஆயுதப்படைகளின் சாமானிய குழுக்களுக்கும் இடையே பிளவுகளை உருவாக்குவதாகும்” என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்களை இராணுவ நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்வதையும், பாகிஸ்தான் இராணுவச் சட்டம் மற்றும் உத்தியோகபூர்வ இரகசியச் சட்டத்தின் தூண்டுதலையும் கூட்டணி அரசாங்கம் (இது பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் PDM என்ற முத்திரையின் கீழ் செல்கிறது மற்றும் 2018 இல் இம்ரான் கானின் தேர்தலுக்கு முன்னர் பாகிஸ்தான் தேர்தல் அரசியலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளால் வழிநடத்தப்படுகிறது) விரைவாக ஏற்றுக்கொண்டது.

கடந்த செவ்வாயன்று பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையில், உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் கலந்து கொண்ட தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டம், இராணுவ நீதிமன்றங்களைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது, 1952 பாகிஸ்தான் இராணுவச் சட்டத்தின் கீழ், ஆயுதப்படைகள் மீது 'போர் நடத்தியதாக' குற்றம் சாட்டப்பட்ட பொதுமக்களை விசாரிக்க இது பயன்படுத்தப்படலாம். அடுத்த 72 மணி நேரத்திற்குள் தாக்குதல்களில் ஈடுபட்ட, இராணுவ நிலைகளைத் தாக்கிய, அல்லது கலவரத்தை 'தூண்டிய' மற்றும் 'உதவிய' அனைவரையும், கைது செய்வதாகவும் இக்கூட்டம் உறுதியளித்தது.

கடந்த புதனன்று, இம்ரான் கானின் பரந்து விரிந்த லாகூர் இல்லமான ஜம்ரான் பூங்காவில் பதுங்கியிருந்த முப்பது 'பயங்கரவாதிகளை' ஒப்படைக்க இம்ரான் கான் மற்றும் PTI தலைமைக்கு அரசாங்கம் 24 மணிநேரம் அவகாசம் அளித்தது. இந்த காலக்கெடு தற்போது கடந்துவிட்டது.

கடந்த வியாழன் மாலை பஞ்சாபின் இடைக்கால அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், இம்ரான் கானின் வீட்டை சுற்றி வளைத்துள்ள போலீசார் அவரது இல்லத்தில் சோதனை நடத்த உத்தேசித்துள்ளதாகக் கூறினார்.

இதற்கிடையில், அரசாங்கத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும், குறிப்பாக பாகிஸ்தான் தலைமை நீதிபதி (CJP) உமர் அட்டா பாண்டியாலுக்கும் இடையே கடுமையான மோதல் அதிகரித்துள்ளது. இம்ரான் கானுக்கு ஆதரவாக CJP ஒரு சார்புடன் இருப்பதாகவும், அவருக்கு 'சிறப்பு சிகிச்சை' வழங்குவதாகவும் PDM குற்றம் சாட்டுகிறது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மாற்றியமைத்து, மற்றொரு சட்டவிரோத சட்ட நடவடிக்கைகளுக்கு மத்தியில், விசேட இராணுவத்தினர்கள், இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைக் குறித்து தீர்ப்பளித்த மூன்று உறுப்பினர் உச்ச நீதிமன்ற பெஞ்சை பண்டியல் தான் ஏற்பாடு செய்தவர் ஆவர்.

கடந்த திங்களன்று, பாராளுமன்றம், தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியலின் 'தவறான நடத்தை' மற்றும் அவரது சத்தியப் பிரமாணத்தில் இருந்து 'விலகல்' ஆகிய காரணங்களுக்காக நீதித்துறையின் உயர் கவுன்சிலில் புகார்களைத் தயாரித்து தாக்கல் செய்ய ஐந்து பேர் கொண்ட குழுவை உருவாக்க அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. திங்களன்று, PDM இஸ்லாமாபாத்தின் உயர்-பாதுகாப்பு 'சிவப்பு மண்டலத்தில்' அமைந்துள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே CJP பதவி விலகக் கோரி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியது. பிரதமரின் மருமகளும், மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் மகளுமான மரியம் நவாஸ், PDM ஆதரவாளர்களிடம் பேசுகையில், “நாட்டின் அழிவுக்கு நீதித்துறையின் முடிவுகளே காரணம்”என்றார். அதைத் தொடர்ந்து, தான் அனைத்து நீதிபதிகளையும் குற்றம் சாட்டவில்லை என்றும் ஆனால், உச்ச நீதிமன்றத்தில் உள்ள இம்ரான் கானுக்கு 'வசதி செய்தவர்களையே'  குற்றம்சாட்டினேன் என்றும் அவர் கூறினார்.

மே 15 ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிக்கு முந்தைய நாளான மே 14 ஞாயிற்றுக்கிழமை CJP ஆல் தயாரிக்கப்பட்ட மற்றொரு முடிவை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) தாக்கல் செய்த மனு தொடர்பான சட்ட நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது. தேசிய மற்றும் இடைக்கால பஞ்சாப் அரசாங்கம் PTI ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட வழக்கிலிருந்து எழுந்த அந்த முடிவை புறக்கணித்தது.

இராணுவம் பகிரங்கமாக வெளிப்படுத்திய ஆதரவுடன், அரசாங்கம் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய இரு மாகாணங்களுக்கான தேர்தல்களை வலியுறுத்துகிறது, இந்த ஆண்டு தொடக்கத்தில் PTI அதன் உடனடி தேசியத் தேர்தல்களுக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை கைவிட்டது. அவை தேசிய சட்டமன்றம் மற்றும் பிற மாகாண சபைகளுக்கான தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்படலாம்.

பாகிஸ்தானில் நடந்துவரும் அரசியல் நெருக்கடியானது, உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, ஆடிக்கொண்டிருக்கும் கடுமையான பொருளாதார மற்றும் பூகோள அரசியல் நெருக்கடியுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தும் PDM அரசாங்கம் (இம்ரான் கானும் அவரது PTI யும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அகற்றப்பட்ட பின்னர் 13 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தது,) அதன் மக்கள் ஆதரவில் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.

கடந்த ஆண்டு, இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தால் முதன்முறையாக பேரம் பேசப்பட்ட அவசரகால மீட்புக் கடனை IMF இஸ்லாமாபாத்திற்கு வழங்கியது. ஆனால் இதுவரை, PDM அரசாங்கத்தால் பல மாத பேச்சுவார்த்தைகள் மற்றும் கூடுதல் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகள் மற்றும்  பாகிஸ்தான் இயல்புநிலையின் விளிம்பில் இருந்தாலும் கூட, 1.1 பில்லியன் டாலர்களை அணுக முடியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியம், உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குவது, ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய தளங்கள் அல்லது பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ உறவை பலவீனப்படுத்துவதற்கான பூகோள அரசியல் சலுகைகளுக்கு அழுத்தம் கொடுக்க இந்தப்  பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது.

இம்ரான் கான் ஒரு வலதுசாரி இஸ்லாமிய ஜனரஞ்சகவாதி ஆவார், அவருடைய பதவி உயர்வு இராணுவத்தின் சூழ்ச்சிகளால் எளிதாக்கப்பட்டது. கானுக்கான அவரது முந்தைய ஆதரவு இப்போது ஒரு வெளிப்படையான ரகசியமாகும். மேலும், இராணுவ அமைப்பு கூட இந்த உண்மையை மறுக்கவில்லை. அரசியல் வட்டாரங்களில், இது 'இம்ரான் கான் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், IMF கட்டளையிட்ட எரிசக்தி மானியக் குறைப்புகளை சுமத்துவது குறித்து, கடந்த ஆண்டு, ஒரு மக்கள் எதிர்ப்புக்கு முகங்கொடுத்து, கான் மீது கருத்து தெரிவித்த பின்னர், இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் பெரும்பாலோர் அவர் மீதான நம்பிக்கையை இழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபானின் வெற்றியை பகிரங்கமாக பாராட்டி, உக்ரேனில் போரின் தொடக்கத்தில் மாஸ்கோவுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பதன் மூலம் அவர் தேவையில்லாமல் வாஷிங்டனை பகைத்துக்கொண்டார் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து, இம்ரான் கான், IMF சிக்கன நடவடிக்கையின் எதிர்ப்பாளராக தன்னை மறுபரிசீலனை செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியால் சிதைக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்தின் பிரிவினரிடமிருந்து முக்கியமாக, வாஷிங்டன் பாகிஸ்தானை கொடுமைப்படுத்துவதையும், அரசியல் வாழ்க்கையில் இராணுவத்தின் அதீத பங்கையும் விமர்சிப்பதன் மூலம் பொது ஆதரவை அவரால் திரட்ட முடிந்தது.

புதனன்று இம்ரான்கான் தனது கருத்துக்களில் நிலைப்பாடுகளை மாற்றினார். தனக்கும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவை PDM உள்ள தனது அரசியல் போட்டியாளர்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். 'PDM தலைவர்கள் மற்றும் (முன்னாள் பிரதமர்) லண்டனுக்கு தப்பி ஓடிய நவாஸ் ஷெரீப்பும், நாட்டின் அரசியலமைப்பு அவமதிக்கப்படுகிறதா, அரசு நிறுவனங்கள் அழிக்கப்படுகிறதா அல்லது பாகிஸ்தான் ராணுவத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறதா என்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை' என்று முன்னாள் பிரதமர் கூறினார். PTI இன் தலைவர் சர்வதேச அரங்கில் உட்பட இராணுவத்தை எப்போதும் பாதுகாத்து வந்ததாக பெருமையடித்துக் கொண்டார். 'நான் இராணுவத்தை கண்டிக்கும் போது, ​​நான் என் குழந்தைகளை விமர்சிப்பது போல் உள்ளது,' என்று அவர் கூறினார்.

அமெரிக்க ஆதரவு சர்வாதிகாரி ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் அரசாங்கத்தில் பணியாற்றிய PTI தலைமையின் பிரிவுகள், இப்போது கானிடம் இருந்து விலகி நிற்கின்றன. இராணுவத்தை பகிரங்கமாகத் தாக்கியதன் மூலம் (முட்டுக்கட்டையான பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தின் அதிகாரத்தின் அரணாகவும், வாஷிங்டனுடனான அதன் பிற்போக்குத்தனமான கூட்டணியின் பிடிமானமாகவும்)  கான் தனது விளையாட்டை மிகைப்படுத்திவிட்டார் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

சமீபத்திய அரசாங்க எதிர்ப்பு, இராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தொழிலாள வர்க்கம் அணிதிரளவில்லை மற்றும் பங்கேற்கவில்லை. அனைத்து ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஜனநாயக விரோதம், ஏகாதிபத்திய சார்பு மற்றும் நிதி மூலதனத்துடன் பிணைக்கப்பட்டவை என்பதை வர்க்க உணர்வுள்ள தொழிலாளர்கள் அறிந்திருக்கிறார்கள். கடுமையான சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வரும் இந்தக் கட்சிகள், ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்தியப் போர்களை ஆதரித்தன. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பாகிஸ்தானின் பிற்போக்கு பூகோள அரசியலின் கருவியாகவும், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் பயமுறுத்துவதற்கும் ஒரு கருவியாக ஊக்குவித்து, மிருகத்தனமான இராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தானில் மேற்கொண்டன.

இம்ரான் கான் அல்லது அவரது PTI க்கு அரசியல் ஆதரவை வழங்கவில்லை என்றாலும், இராணுவ நீதிமன்றங்களைப் பயன்படுத்துவது உட்பட போராட்டங்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு எதிர்ப்பாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கடுமையான அரச அடக்குமுறையை தொழிலாளர்கள் கண்டிக்க வேண்டும். இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கு எதிராக நெருக்கடி மற்றும் ஊழல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும்.

பைடென் நிர்வாகம் பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடி பற்றி எதுவும் கூறவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சல்மே கலீல்சாத் போன்ற மற்ற அமெரிக்கப் பிரமுகர்கள் பாகிஸ்தானிய அரசியலில் வெளிப்படையாகத் தலையிட்டுள்ளனர். சமீபத்திய ட்வீட்களில், கலீல்சாத், இம்ரான் கானைப் பகிரங்கமாக ஆதரித்தார், 'தற்போதைய இராணுவத் தளபதி பதவி விலக வேண்டும் மற்றும் விஷயங்களைத் திரும்பப் பெற தேர்தல் தேதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எனது அழைப்பை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

அமெரிக்காவில், PTI உறுப்பினர்கள் பாகிஸ்தானின் அரசியல் சூழல் குறித்து காங்கிரசிடம் வற்புறுத்தினார்கள். கடந்த மாத இறுதியில், பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் டொனால்ட் ப்ளோம், பாகிஸ்தான் துணைத் தலைவர் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) ஃபவாத் சவுத்ரியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார் என்பது ஃபவாத்தின் மனைவி ஹிபா சவுத்ரியின் ட்வீட்டில் தெரியவந்துள்ளது.

அரசாங்கத்தின் மீதான வெகுஜன அதிருப்தியும் கோபமும் பல தசாப்தங்களாக பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் தூண்டப்படுகிறது, இப்போது உணவு மற்றும் எரிசக்தி விலைகள் உயர்ந்து, பாக்கிஸ்தானிய நாணயத்தின் தொடர்ச்சியான மதிப்பிழப்பு ஆகியவற்றால் கூட்டப்படுகிறது. கடந்த கோடையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்காதது, டாலர் தட்டுப்பாட்டால் இறக்குமதியால் இயங்கும் பல தொழில்கள் இழுத்து மூடப்பட்டது. மற்றும் இறக்குமதியை பெரிதும் நம்பியிருக்கும் மருந்துத் துறையின் உடனடி மூடல், வேலையின்மை மற்றும் பட்டினி போன்றவற்றைப் பரவலாக்குகிறது. கூடுதலாக, COVID-19 இன் புதிய வகைகளின் தோற்றம் மற்றும் அடிப்படைவாத பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் சமூக பதட்டங்களை மேலும் உயர்த்துகின்றன.

பாக்கிஸ்தான் அரசின் நெருக்கடி, ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போர் போன்ற பூகோள அரசியல் நெருக்கடிகளுடன் பெருகிய முறையில் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் வரவிருக்கும் காலம் இன்னும் வெடிக்கும் தன்மை உடையதாக மாறும். குறிப்பாக தைவானின் நிலைமை தொடர்பாக, இந்தியாவால் ஆதரிக்கப்படும் அமெரிக்கா, பொறுப்பற்ற முறையில் சீனாவை குறிவைப்பதால், யூரேசிய பிராந்தியத்தில் மேலும் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன.

நிரந்தரப் புரட்சியின் மூலோபாயத்தில் தங்கள் போராட்டத்தை அடித்தளமாகக் கொள்வதுதான் பாக்கிஸ்தான் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரே வழியாகும். ஏகாதிபத்தியத்தில் இருந்து உண்மையான சுதந்திரம் உட்பட, உழைக்கும் மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக அபிலாஷைகள் என்பன தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும். தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எதிராக கிராமப்புற உழைப்பாளிகளை அதன் பின்னால் அணிதிரட்டி உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகிஸ்தானியப் பிரிவான ஒரு புரட்சிகர தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.